Showing posts with label அரசு அலுவலகம். Show all posts
Showing posts with label அரசு அலுவலகம். Show all posts

Mar 12, 2014

அரசு அலுவலக அனுபவம் - வங்கி


வங்கிகள் நம்மில் பலருக்கும் பயமுறுத்தும் இடமாகவும, குரலை உயர்த்தி பேசக்கூட தயங்கும் இடமாகவும் உள்ளது. அது காலங்காலமாக வங்கி ஊழியர்களாலும் மக்களாலும் தொடரப்பட்டு விட்டது. இன்றைய காலகட்டத்தில் தனியார் வங்கிகள் இந்த முறையை சிறிது மாற்றி உள்ளன. ஆனாலும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் நடைமுறைகளை இன்னமும் அவ்வளவு எளிதாக்கவில்லை. இவர்கள் தவறு செய்து விட்டு அதை நம் தலையில் கட்டும் வித்தையை நமக்கு தெரியாமலே செய்கிறார்கள். அதை பற்றிய எனது அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

நான் நகை கடன் வேண்டி ஒரு பொது துறை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினேன்.  ஆனால் இந்த நகை கடனுக்கும் சேமிப்பு கணக்குக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை, கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள்.  பல தனியார் வங்கிகள் வெறும் சம்பள பட்டியலை வைத்தே லட்சக்கணக்கில் கடன் கொடுக்கின்றார்கள், இங்கு நகையையும் பெற்றுக்கொண்டு இதை செய்கிறார்கள்.  தொடக்கமே ஒரு தகராராய் அமைந்தது.  நான் நகை கடன் வேண்டி விசாரிக்க சென்றபொழுது ஒரு ஊழியர் சேமிப்பு கணக்கு தொடங்க சொன்னார். இந்த கிளை கிராமப்புறத்தில் இருப்பதால் கணக்கு தொடங்க ரூ.500 என்றும், செக் புக் வேண்டும் என்றால் கூட ரூ.1000 என்றும் சொல்ல, நான் ரூ.500 ஐ கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்தேன். இதற்காக முகவரி சான்று மற்றும் புகைப்பட சான்றுகளை வாங்கிக்கொண்டார்கள்.

இதற்கு ஒரு மாதம் கழித்து, நகையை வைக்க சென்றபோது மறுபடியும் முன்பு கேட்ட அத்தனை சான்றுகளையும் கேட்டனர். எதற்கு இப்படி தீவிரவாதி மாதிரி நடத்துகிறீர்கள் என கேட்டதற்கு, வங்கியின் நடவடிக்கைகளை நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்ற பதில் கிடைத்தது. சரி நாமே கடனுக்கு நிற்கின்றோம் என நினைத்து தொடராமல் விட்டுவிட்டேன். கடனும் கிடைத்தது.  பிறகு ஒரு வருடம் வங்கி பக்கமே செல்லவில்லை. ஒரு முறை நகை கடன் செலுத்த சென்றபோது பாஸ் புக்கில் பதிவு செய்ய கொடுத்த போது தான் தெரிந்தது நான் செலுத்திய ரூ.500/- தேய்ந்து போய் ரூ.50 ல் இருந்தது.  என்னவென்று விசாரிக்க மேனேஜரிடம் கேட்க அவரோ புக்கை பார்த்துவிட்டு நீங்கள் சராசரி இருப்புக்கு குறைவாக வைத்திருந்ததால் வட்டி பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்றார்.  நான் மறுத்து இல்லை ரூ.500 செலுத்தினேன் அதற்கான பதிவு இருக்கிறது. அதற்கு பிறகு ரூ.10 பிடித்தம் எனக்கு தெரியாமலே செய்யப்பட்டுள்ளது என்று கூற அவரோ அது காப்பீட்டு கட்டணம் உங்களுக்கு ரூ.2 லட்சம் வரை கவரேஜ் உள்ளது என்றார். என்னிடம் தேவையான அளவுக்கு காப்பீடு செய்துள்ளேன், மேலும் கேட்காமல் பிடித்தது தவறு, சரி அந்த பணத்திற்கான சான்று ஏதேனும் வேண்டும் என கேட்டேன். அவரோ இது குரூப் பாலிசி அப்படி கொடுக்க முடியாது என கோபமாக பேசினார்.

அதற்கு மேல் என்னால் பொறுமையாக பேச முடியவில்லை. என்னை  கேட்காமலே பணத்தை பிடித்து விட்டு, இருப்பு வைக்கவில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலிசிக்கு ரூ.10 சேர்த்து கட்ட வேண்டும் என சொல்லி இருந்தால் கட்டி இருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் தவறு செய்து விட்டு என்னிடம் கோபப்படக்கூடாது. எனக்கு பிடித்ததை எல்லாம் வட்டியுடன் சேர்த்து கொடுங்கள் என்றேன். அவரோ அப்படி எல்லாம் முடியாது என கூறினார். சரி நீங்கள் கூறியதை எனக்கு கடிதமாக கொடுங்கள் என கேட்டேன். அவர் வேலை நேரத்தில் பிரச்சனை செய்ய வந்திருக்கிறீர்களா? என்றார். இதற்கு மேல் உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை நான் RBI இடம் புகார் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு நகர முற்பட, பிறகுதான் இறங்கி வந்து பேசினார்.  நீங்கள் கேட்பது போல் செய்ய முடியாது தம்பி என்றார். எனக்கு இந்த பதில் தேவையில்லை நான் வருகிறேன் என்றேன். அவர் யோசித்துவிட்டு சரி உங்கள் கணக்கில் ரூ.500 ஐ வரவு வைக்கிறேன் என்றார். நானோ அதற்கான ஒரு வட்டியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றதற்கு ஒரு மனதாக ஒப்புக்கொண்டார்.  அன்றே பணத்தை வரவில் வைத்து விட்டுத்தான் வெளியில் வந்தேன்.

இப்படி இவர்கள் தாங்கள் செய்வது சரி என்ற எண்ணத்திலும், நாம் கேட்பது மகா தவறு என்ற எண்ணத்திலும் உள்ளனர். அதை நாம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் 10 ரூபாயாக இருந்தாலும் அது நம் பணம். இதே போன்று மற்றொரு வங்கியை பற்றி RBI க்கு புகார் தெரிவித்த அனுபவத்தை இன்னொரு பதிவில் பகிர்கின்றேன்.

Feb 22, 2014

கோர்ட்டில் ஒரு நாள்

.

இதுவரை கோர்ட் நடவடிக்கைகளை திரையில் மட்டுமே கண்ட எனக்கு முதல் முறையாக அவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் கோர்ட், கல்லூரிக்கு அருகாமையில் அமைந்தும் அதன் நடவடிக்கைகளை பார்க்கும் ஆர்வம் இல்லாததால் உள்ளே சென்றதில்லை. அதிகபட்சமாக குறைந்த விலையில் கிடைத்த மதிய உணவிற்காக மட்டுமே சென்றுள்ளேன். இப்பொழுதுதான் அதுவும் அலுவகல பணியின் காரணமாக செல்ல வேண்டி இருந்தது. 

எங்கள் நிறுவனத்தில் Cheque மோசடி வழக்கு காரணமாக சென்றேன். உள்ளூரில் வசிப்பவர் பேரில்தான் கேஸ் போட முடியும் என்பதால் என் பெயர் முன்மொழியப்பட்டது.  கம்பெனி வக்கீலை சென்று சந்தித்து அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்தேன், அங்கேயே ஏழரை ஆரம்பித்தது. சில வங்கி நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் இல்லாததால் மனிதர் டென்ஷன் அடைந்து விட்டார். எப்படியோ சமாளித்து தகவல்களை கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து கேஸ் file செய்ய கோர்ட்க்கு வரச்சொன்னார். நானும் நம்மை இன்றே ஜட்ஜ் கேள்வி கேட்க ஆரம்பிப்பார் என்ற ஆர்வத்தில் நேரத்திலேயே சென்றேன். வக்கீலின் ஜூனியர் மட்டும் போன் செய்து இன்னும் சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வந்து ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அடுத்த வாரம் வரச்சொல்ல என் சுருதி சட்டென இறங்கியது.

அடுத்த வாரம் கூப்பிட்டு சரியாக நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார். இந்த முறை கோர்ட் ரூமுக்கே வரச்சொல்ல ஆர்வம் அதிகரித்தது. அங்கே சென்று அவமானப்பட போவது தெரியாமல் நேரத்திலேயே சென்றேன். பிறகு தான் வக்கீல் வரமாட்டார் என்று தெரிந்தது சரி ஜூனியர் வருவார் என பார்த்தால் அவரும் கழண்டு கொள்ள, ஜூனியரின் ஜூனியர் ஒருவர் சரியாக கோர்ட் ஆரம்பிக்கும் முன்னர் வந்தார். வந்தவர் என்னிடம் கோர்ட் அறை வாசலில் எல்லோர்க்கும் முன்பாக சென்று நிற்குமாறு கூறிவிட்டு அறையின் உள்ளே சென்றார். கோர்ட் அறையின் முன்புறம் என்றதும் ஏதோ யாரும் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு இதை சொல்கிறார் என நினைத்துக்கொள்ள வேண்டாம். அது ஒரு சிறிய அறை ஆனால் முன்புறம் மட்டும் ஒரு நூறு பேருக்கும் மேல் வாசலை அடைத்துக்கொண்டு நின்று இருந்தனர். இதில் எப்படி எல்லோருக்கும் முன்பு போய் நிற்பது என்று நினைத்தேன். சரி நிற்கவில்லை என்று திட்டி விட்டால் என்ன செய்வது என்று முண்டியடித்து முன்னேறினேன். முதலில் பின் வாசலில் நின்று இருந்தவர்களை அழைத்தனர். அவர்கள் ஜட்ஜ்க்கு எதிர்புறம் இருந்த கூண்டில் நின்று கையெழுத்து போட்டனர். சரி இங்கு இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் போல, நாம் அங்கே நிற்போம் என நகர்ந்தேன்.  அங்கே சென்ற பதினைந்து நிமிடத்தில் மொத்த கூட்டமும் களைய நான் மட்டும் நின்றிருந்தேன். பிறகு தான் சோதனையே, இப்பொழுது முன் வாசல் முறை போல. அங்கிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். இது என்னடா கொடுமை என்று அங்கே ஓடினேன். இம்முறை கூட்டம் உஷாராகி வழி விட மறுக்க கடைசி இடமே கிடைத்தது. கூட நின்றவரிடம் இரண்டு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அவர் பின் வாசல் கொலை மற்றும் பிற வழக்குகளில் இருப்பவர்கள் தினமும் கோர்ட்டில் கையெழுத்திட வருபவர்கள் , இந்த கூட்டம் மற்ற பொது வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் என்றார்.

நேரம் அதிகரிக்க கூட்டம் குறைய தொடங்கியது. என் முறை வந்த போது கம்பெனி பெயருடன் என் பெயரை சேர்த்து சொன்னார்கள், கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள் நுழைந்தேன். முதலில் ஒரு முறை அறையை நோட்டமிடலாம் என்று ஜட்ஜ், டைப் அடிக்கும் பெண்மணி, அவருக்கு கீழ் இருந்த பெண்மணி, தவாளி, உட்கார்ந்திருந்த வக்கீல்கள் என்று சுற்றி பார்த்து திரும்பவும், ஜட்ஜ்க்கு கீழே இருந்த பெண்மணி 8-1 வாய்தா என சொல்ல ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க, மறுபடியும் சொன்னார். நான் எதும் சொல்லாமல் அவரையே பார்க்க, அவர் மறுபடியும் வாய்தாங்க  என்றார். என் பின்னாடி இருந்தவர் என்னை சரி என்று சொல்லிவிட்டு பின்னாடி வாப்பா என்று காதில் கிசு கிசுக்க, நான் அந்த பெண்மணியிடம் ஓகே என்று விட்டு பின்னால் நகர கோர்ட் மொத்தமும் சிரித்தது. ஒன்றும் புரியாமல் முழிக்க ஒருவர் தலையிலடித்துக்கொண்டு வாய்தா ன்னு சொன்னா வந்துரனும் என்றார். போயிட்டு அந்த தேதியில வாங்க என்றார். என்னடா இது நம் நினைப்பிற்கு மாறாக நடக்கிறதே என்று வெளியில் வந்து விட்டேன்.

இப்படியாக ஆறு முறை வாய்தாவிலேயே முடிந்து போனது. இறுதியாக கடந்த திங்கட்கிழமை வரச்சொன்னார்கள். எப்படியும் வாய்தா என்ற முடிவில் தான் சென்றேன். அன்றைக்கு வழக்கத்தை விட காத்திருந்தேன். உணவு இடைவேளை வந்த பிறகு தான் தெரிந்தது எங்களுடைய கேஸ் கட்டை கோர்ட்டில் தொலைத்து விட்டார்கள் என்று. இப்படியும் நடக்குமா (எனக்கு மட்டும் நடக்கும்) என நினைத்துகொண்டு இருக்க ஜூனியர் சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். சாப்பிட்டு விட்டு வர அவரோ நாளைக்கு வாங்க என வழி அனுப்பி வைத்தார்.  அடுத்த நாள் கடுப்பிலேயே போய் நின்றேன். ஜூனியர் என்னிடம் வந்து வழக்கம் போல அறையின் முன்புறமாக நிற்க சொல்ல கோபம் வந்ததும் "எப்படியும் வாய்தா தான் இதுல முன்னாடி நின்னா என்ன பின்னாடி நின்ன என்ன" என்று கேட்க தோன்றி நாகரிகம் கருதி அமைதியாக நின்றேன். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

மதியம் ஒரு மணி வரை அழைப்பு வராததால், சரி கேஸ் கட்டு இன்னும் கிடைக்க வில்லை போல என்று என்னும்போதே அழைப்பு வர எதுவுமே சொல்லாமல் ஜட்ஜ்க்கு கீழ் இருக்கும் பெண்மணி பார்த்துக்கொண்டிருக்க, என்னை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை அழைத்தார். சரி இதுவும் எதோ புது முறை போல என நினைத்துக்கொண்டு வெளியேறினேன். ஜூனியர் வந்து சாப்பிட போகாமல் ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார்.  வெறுப்பில் வேடிக்கை பார்க்கலாம் என நின்றால் கால் வலிக்க, வெளியில் இருந்த திண்ணையில் சென்று அமர. அங்கு ரிமாண்டுக்கு வந்த கைதிகள் வேறு பலத்த பாதுகாப்புடன் இருக்க, ஒரு ஓராமாக உட்காந்தேன். சரியாக இரண்டு மணிக்கு அழைக்க நானும் வாய்தா என்ற முடிவிலேயே சென்றேன். ஆனால் கோர்ட் பெண்மணி என்னை கூண்டில் ஏறி நிற்க சொன்னார். பதட்டத்தில் ஏறி நின்றேன்.

"சத்தியமாக" என்று சொல்லுமாறு என்னிடம் சொல்லப்பட, எங்கே பகவத் கீதையை காணோம் என்ற ஏமாற்றத்தில் அப்படியே பிழையில்லாமல் சொல்லிவிட்டு நின்றேன். பிறகு ஜட்ஜ் ஒவ்வொரு கேள்வியாக பொறுமையாக கேட்க நானும் பதில் சொல்ல அவருக்கு அருகில் இருந்த டைப் ரைட்டர் ஒரு பேப்பரில் நான் சொன்னதை அப்படியே அடித்து அதில் கையெழுத்து போட்டுவிட்டு போக சொன்னார்கள். நானும் கூண்டை விட்டு இறங்கி கையெழுத்து போட செல்ல, ஜூனியர் தடுத்தார். மறுபடியும் கையெழுத்து போட சொல்லி அழைப்பு வர, நான் செல்ல ஜூனியர் தடுக்க, கடுப்பாகி அவரிடம் போகவாங்க என்று  கேட்டேன். அவரோ வெளியில் நில்லுங்க என்றார். வெளியில் நிற்கும்போது ஜூனியர் வந்து பாராட்டினார். நன்றாக தடுமாறாமல் பதில் சொன்னதாக. சரி கையெழுத்து எப்ப போட பசிக்குதுங்க எனும்போதே தவாளி வந்து நின்றார். அவரிடம் ஜூனியர் இருபது கொடுக்கச்சொல்ல, இதற்கு தானாடா இவ்வளவு என்று அலுத்துக்கொண்டே பர்சில் கைவிட ஒரே ஒரு ஐம்பது மட்டும் பல்லிலத்தது, அவரும் பல்லை இளித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். இவ்வாறாக என் முதல் அனுபவம் முற்றுப்பெற்றது. இதில் நடந்த சில சுவராஸ்ய தகவல்களை அடுத்து பகிர்கின்றேன்.

Oct 8, 2013

அரசு அலுவலக அனுபவங்கள்


வாழ்கையில் எல்லோருக்கும் ஏதோவொரு நாளின் நல்ல/கெட்ட நேரத்தில் ஏதேனும் அரசு அலுவலகத்தின் வாசலை மிதித்திருக்க வேண்டும். அது பதிவு அலுவலகம், போலீஸ், கோர்ட் அல்லது கோட்டை என வித விதமான அனுபங்கள் கிடைத்த இடமாக இருக்கலாம். சிலருக்கு அவற்றை நினைத்து சிரிக்க தோன்றும் சிலருக்கு எரிச்சல் மிஞ்சும். 

என்னை பொறுத்த வரை அரசு ஊழியர்களை பற்றி மிக மோசமான மன நிலையையே கொண்டுள்ளேன் (நல்லவர்கள் மன்னித்துக்கொள்ளவும்). எல்லோரும் அவர்களின் வேலைகளுக்கு தகுதியானவர்களே ஆனால் அவர்களின் செயலால் கீழான நிலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்கும்வரை காட்டும் முனைப்பை, சேர்ந்த பின்பு காட்டுவதில்லை.  இங்கே என்னுடைய அனுபங்களை பகிர்கின்றேன்.

முதல் அனுபவம்: 

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றுக்கு செல்லும்போது  சாதி சான்றிதழ் தேவைப்பட்டது. அதனால் அது சம்பந்தமாக ஊரில் இருந்த நண்பரிடம் கேட்க, அவர் நீண்ட விளக்கம் கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார். முதலில் சந்தித்தது மணியக்காரர், நான் கண்ட முதல் அரசு அதிகாரி. அரசு அலுவலகம் பற்றிய எண்ணத்தை தவிடு பொடியாக்கியதும் இந்த இடம் தான். முன் புறம் தென்னை ஓலையில் வேய்ந்து மிக சாதரணமாக இருந்தது. என் இரண்டு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  எங்களை பார்த்ததும் காரணத்தை கேட்டவர் விண்ணப்பத்தை வைத்து விட்டு அவருக்கு கார்பன் மற்றும் A4 பேப்பரும் வாங்கி வரச்சொன்னார். என் நண்பர்கள் இருவரும் அதை செய்ய தயாராக இருக்க என்னால் தடுக்க முடியாமல் அன்று செய்தேன். பலனாக அவர் சான்றிதழில் கையெழுத்து இட்டார்.

அதற்கு அடுத்தபடியாக ரெவென்யு இன்ஸ்பெக்டர். இவர் எங்கள் ஊரிலிருந்து 15 கிமீ தள்ளி இருந்தார். அதனால் அடுத்த நாள் அவரை சந்திக்க முடிவெடுத்து காலையிலேயே சென்றோம். காலை 10 மணிக்கு சென்றால் யாருமே இல்லை. 11 மணிக்கு அவரது உதவியாளர் மட்டும் வந்தார். எங்களை காத்திருக்க சொல்லிவிட்டு அவர் வேலையை  தொடங்கினார். மதியம் வரை இன்ஸ்பெக்டரை ஆளையே காணவில்லை. பசி வேறு வயிரை குடைய, வேறு வழியில்லாமல் அதற்கு பிறகு தாசில்தாரை சந்திக்க என்று வீட்டில் வாங்கிய பணத்தில் மதியம் சாப்பிட்டோம்.  பின்னர் வந்து அலுவலகம் முன்பு இருந்த மரத்தடியில் ஒரு குட்டி தூக்கம் போட, ஆபிசர் 3 மணிக்கு வந்தார். உடனே சென்று பார்த்தால் வேறு சிலருடன் பேசிகொண்டிருக்க, ஒரு அரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. எங்களை அவரே அழைக்க கால்கள் தரையில் படாமல் சென்றோம். அவர் உடனே கையெழுத்து போட்டுவிட்டு காசை கேட்க, நான் ஒன்றுமே இல்லை என்றேன் முந்திக்கொண்டு. அவரின் உதவி மதியம் சாப்பிட மட்டும் காசிருக்கா என்றார். கோவத்தில் பதிலுக்கு பதில் பேச உதவி அடங்கினார். இறுதியில் வெற்றி எங்களுக்கே. காசில்லாமல் கையெழுத்து. 

அடுத்து தாசில்தார், அவரை சந்திக்க அடுத்த நாள் சென்றேன்.அந்த இடம் மட்டுமே நான் சினிமாவில் பார்த்தது போல் இருந்தது. முதலில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு பத்து நாள் கழித்து வரச்சொன்னார் ஒரு உதவி. பத்து நாளுக்கு பின்பு ஒரு வாரம் நடந்தும் சான்றிதழ் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பும் தெரிந்தது. ஆனால் அவருக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாரில்லை. எனவே எவ்வளவு நாட்கள் ஆனாலும் காத்திருப்பது என முடிவெடுத்தேன். ஒரு வாரம் இதே நிலை நீடிக்க தாசில்தாரை சந்திக்க முடிவெடுத்தேன். அவரை சந்திக்க உதவி தடுக்க மீறி சென்று சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டதாலோ என்னவோ உடனே சான்றிதழை கொடுக்க சொல்ல அங்கேயும் கையூட்டு கொடுக்காமல் வேலை நடந்தது.

நீங்கள் கையூட்டு கொடுத்த விவரத்தை அதாவது, எந்த அலுவலகத்தில் ,யாருக்கு, என்று, எவ்வளவு கொடுத்தீர்கள் போன்ற தகவல்களை WWW.IpaidBribe.COM ல் தெரிவிப்பதன் மூலம் ஊழலை வெளிக்கொணரலாம். (ஆனால் இப்படி பணத்தை வாங்கும் அசிங்கங்கள் இதெற்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்)


இப்படி தொடக்கமே அமைந்ததாலோ என்னவோ இன்று வரை எப்பொழுதும் எந்த இடத்திலும் கையூட்டு கொடுக்க மனம் வருவதில்லை. தொடரும்.....



image courtesy www.searchandhra.com