Nov 9, 2013

மழை!


மழையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக சந்தோசம் அடைந்திருந்தால் நீங்களும் என்னை போன்றவர் தான். உடனே நீங்கள் படத்தில் காட்டுவது போல நனைந்துகொண்டே பாடுவது, நடப்பது என்பதல்ல என் மகிழ்ச்சி. அது ஒரு தனி சுகம். சிறு வயதில் இருந்து மழையில் நனைவது என்பதை விட அதனால் நடக்கும் செயல்களால் சந்தோசம் அடைந்தவன்.

ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் தான் படித்தேன். ஆனாலும் வீட்டுக்கு வருவது என்பது மாலையில் மட்டுமே. பள்ளிக்கு வெளியே ஆளுக்கு ஒரு குட்டி முள் செடியை பங்கு பிரித்து வைத்திருப்போம். தினமும் அதற்கு பாத்தி கட்டி சிறுநீர் விட்டு அதை வளர்ப்பது தான் போட்டி. ஒரு நாளைக்கு முடிந்த வரை நீர் ஊற்றி வளர்ப்போம். செடியோ மிக கஷ்டப்பட்டு வளரும், காரணம் சொல்லவே வேண்டாம்.  மழைக்காலத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் நம் நீர் தேவைப்படாது. மேலும் அந்த காலத்தில் மட்டுமே பச்சை பசேலென வளரும்மற்ற நண்பர்களின் செடி கருக நம்முடைய செடி மட்டும் மழையால் வளர்வதில் ஒரு மகிழ்ச்சி. மேலும் ஊரின் தெற்குப்பக்கமாக இருக்கும் தோட்டத்தில் மாமரம் இருக்கும். மாங்காயை சாப்பிட வேண்டுமென்றால் கல்லால் அடிக்க வேண்டும், ஆனால் அது தோட்டாக்காரன் மருதனை எழுப்பி விடும். அவன் துரத்துவான் அல்லது திருப்பி கல்லால் அடிப்பான். சிறிது தைரியமானவர்கள் அல்லது ஓடததெரிரிந்தவர்கள்  மட்டுமே  செய்யும் காரியம் அது. மற்றொரு வகை மழையால் கீழே கிடக்கும் காய்களை பொறுக்குவது. நான் இரண்டாம் வகை. பள்ளி இடைவேளை நேரம் அல்லது மாலையில் வீட்டுக்கு வந்ததும் சட்டையை கழற்றி வைத்து விட்டு வெறும் பனியன் மற்றும் டவுசருடன் சென்று பொறுக்கும் வேலையை செய்ய வேண்டும். இது மழைகாலத்தின் முதல் மகிழ்ச்சி.

ஆறாம் வகுப்புக்கு எனது ஊரில் இருந்து பதினைந்து கீ.மீ தொலைவில் இருக்கும் ஆலாந்துறையில் சேர்ந்தேன். அந்த பகுதியிலேயே மிக பெரிய பள்ளி இது தான். இதை விட்டால் கோவை டவுன் பகுதியில் உள்ள பள்ளிகளில் தான் சேரவேண்டும். அதற்கு வீட்டில் தடா. ஆறாம் வகுப்பில் முதல் வாரத்திலேயே சந்தோஷம் மனதில் குடியேறி விட்டது. காரணம் பள்ளிக்கு அருகிலேயே ஆறு. உடன் தினமும் மதியம் சாப்பிடுவது என்பது அருகில் இருக்கும் கரும்பு / மஞ்சள் தோட்டங்களில் தான். வகுப்பறைகளும் மிக காற்றோட்டமாக இருக்கும். காற்றோட்டம் என்றால் ஜன்னல் கதவு என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு கதவில்லா வாசல் மட்டுமே, கூரைக்கும் சுற்று சுவருக்கும் மத்தியில் நான்கடிக்கு ஒன்றுமே இருக்காது. வெயில் காலத்தில் மட்டும் கொடுமையாக இருக்கும். மழைக்காலத்தில் எப்படி உட்காருவது என்று யோசிக்க வேண்டாம். பள்ளிக்கு விடுமுறை தான். அதுவும் சாதாரண மழைக்கே.  விடுமுறை விட்டால் நேராக ஆற்றுக்கு சென்று விளையாடுவது தான் முதல் வேலை. கன மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்ப்பதில் மற்றும் உடனே வீட்டுக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி

பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு நகரின் மையப்பகுதியில் இருந்த அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இருந்த நேரத்தை விட தியேட்டர்களில் இருந்த நேரம் தான் அதிகம். எனவே அங்கு அதிகம் மழையை அனுபவித்ததில்லை. ஆனால் அங்கு இருந்த விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தனியாக உட்கார்ந்திருப்பதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமே.  கல்லூரி காலத்தில் டைப்ரைட்டிங் படிக்க பக்கத்து ஊரில் உள்ள நிறுவனத்தில் நண்பர்களுடன் சேர்ந்தேன். அப்பொழுது மாலை நேர மழைக்காலத்தை அங்கிருந்த கல்லூரி பெண்களை பார்ப்பதில் கழித்து கூட ஒரு வித மகிழ்ச்சியே.

பின்பு முதல் வேலைக்கு சேர்ந்த பின்பு சில வருடங்களை தோழியுடன் மழை  நேரங்களில் ஊரை சுற்றிய நாட்கள் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள். இன்னமும் என்னுடைய பைக்கில் மழை நேரத்தில் செல்வதை ரசித்து செய்கின்றேன்.  I  am Happy....

Nov 8, 2013

தீபாவளி!


இருபது வருடங்களுக்கு முந்தைய தீபாவளியை இன்றைய நாளுடன் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யவே முடியாத அளவுக்கு மலையளவு வளர்ந்துள்ளது.  அன்றைக்கு வெறும் 500 ரூபாயில் முடிந்த நாள் இன்றைக்கு 10,000 க்கு குறைவில்லாமல் தேவைப்படுகிறது.  புது துணியை எதிர்பார்த்து காத்திருப்பது, பட்டாசு வாங்கும் நாளை எதிர்பார்ப்பது என எல்லாமே எதிர்பார்ப்பில் கழிந்த நாட்கள் அவை. இன்றைக்கு தேவையான பணம் இருந்த போதிலும் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.

முன்பு தீபாவளி என்பது பள்ளியின் விடுமுறை நாளை எதிர்பார்த்து ஆரம்பிக்கும். வீட்டில் புது துணி எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற ஏக்கம் தொடங்கும். தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் புது துணி கிடைக்கும்.  அதை டெய்லரிடம் கொண்டு சென்றால் தீபாவளி அன்றைக்குத்தான் கிடைக்கும் என்று இடியை இறக்குவார். அம்மாவிடம் சொன்னால் அவரின் திட்டலில்தான் கொஞ்சம் முன்பே தருகிறேன் என்பார். ஆனாலும் அதிக தீபாவளி புது துணிகள் முந்தைய நாள் இரவு வரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்க வைத்தே டெய்லர் தந்துள்ளார்.

அதேபோலத்தான் பட்டாசுகளும். பள்ளியின் அருகில் கிடைக்கும் விலை பட்டியல் மற்றும் ஊரில் கிடைக்கும் பட்டியல்களை கொண்டு பட்டாசுகளை முன்பே மலையளவு குறித்து வைத்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ கடுகளவு தான். அதுவும் அப்பா போனஸ் வந்தால்தான் பட்டாசு என்று சொல்லிவிடுவார். எனவே சில காலம் போனஸ் என்றால் என்னவென்றே தெரியாமலும், தெரிந்த பின்னர் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்தது. பட்டாசு வாங்க ஊருக்கு அருகிலிருக்கும் FCI கிடங்கிற்கு அப்பா கூடிச்செல்வார். அது அரசாங்க கடை என்பதாலும், அங்கு விற்பனையில் இருப்பவர் அப்பாவிற்கு தெரிந்தவர் என்பதாலும், நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கடையில் மட்டுமே பட்டாசு வாங்கியுள்ளேன், இன்று வரை.

தீபாவளியின் அதிகாலை என்பது எண்ணை குளியலுடன் ஆரம்பிக்கும், அம்மா தங்கைக்கும் எனக்கும் நல்லெண்ணெய் தேய்த்துவிட அப்பா வைத்த சுடு தண்ணீரில் குளித்து விட்டு புது துணி உடுத்திக்கொண்டு முதல் சரத்தை கொடுத்து வைக்க சொல்வார். அதன் பின்னர் அவரும் குளியலை முடித்துக்கொண்டு சைக்கிளில் குல தெய்வம் கோவில், மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் என சென்று அங்கும் ஒவ்வொரு சரத்தை காணிக்கை வைக்க வேண்டும்.  பிறகு தான் மிச்சம் இருக்கும் வெடிகளை தொட வேண்டும் அவற்றை நண்பன் மோகனுடன் போட்டி போட கொஞ்சம் வெடிகள், பாட்டி வீட்டில் கொஞ்சம் வெடிக்க வெடிகள் என கணக்கு நீண்டு கொண்டே போகும்.  அதிலும் இரவில் வெடிக்கும் வெடிகள் தங்கைக்கும் மிச்சம் மீதி கார்த்திகை தீபத்திற்கும் கொடுத்து விட வேண்டும். ஆனாலும் அந்த நாளின் நினைவுகள் இன்றும் நீங்காமல் உள்ளன. 

வளர்ந்த பின்பு நண்பர்குலடன் சேர்ந்து கொண்டு கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை.  ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில் ஒரு புறம் நாங்களும் மறு புறத்தில் மற்றொரு நண்பர்களும் நின்று கொண்டு பட்டாசுகளை மேலே வீசிக்கொண்டும் ராக்கெட்டுகளை நிலத்தில் படுக்க வைத்தும் விடுவோம். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஆனதில்லை, சில வாசல் கூரைகள் தீப்பிடித்ததை தவிர.

இவை மொத்தமும் அன்றைக்கு வெறும் 3000 ரூபாயில் முடிந்துள்ளன. இன்றைக்கு அது பல மடங்கு உயர்ந்திருந்தாலும் அந்த சந்தோசத்தை தருவதில்லை. எதிர்கலாத்தில் என் பெண்ணின் மூலம் அவை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்/நம்பிக்கையில் நாளைய தீபாவளியை எதிர்நோகியுள்ளேன்.
  

Oct 9, 2013

குடி நாடு


சிறுசு முதல் பெருசு வரை எல்லோரும் வரையறையின்றி இன்றைக்கு சங்கமிக்கும் இடம் டாஸ்மாக்.  முன்பு பண்டிகைக்கு குடித்தவர்கள் இப்பொழுது காரணமே தேவைப்படாமல் எல்லா நாளும் குடிக்கின்றார்கள். இதில் வருத்தப்படும் விஷயம் இளம் வயதினரின் குடிப்பழக்கம். சந்தோசத்தையும் துக்கத்தையும் காரணம் காட்டி குடிக்கின்றனர். முன்பெல்லாம் குடிக்க காரணங்களாக வீட்டு பிரச்சனைகள், வேலை அல்லது கடன் பிரச்சனைகள் இருந்தன. இன்றைக்கு ஒருவர்  வேலை கிடைத்தாலும்,  வேலை போனாலும் குடிக்கின்றனர். குழந்தை பிறந்தாலும், வீட்டில் யாரவது இறந்தாலும் குடிக்கின்றனர். இந்த நிலையை ஏற்படுத்திய பெருமை முழுக்க திமுக மற்றும் அதிமுக வையே சேரும். 

இன்றைய சினிமாக்காரர்கள் குடிகாரர்களை மகா குடிகாரர்கள் ஆக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளியாகும் திரைப்படங்களில் குறைந்தபட்சம் ஒரு குடிக்கும் காட்சியாவதுஇடம் பெறுகிறது. மூன்று, நான்கு படங்கள் முழுக்க டாஸ்மாக்கிலேயே எடுக்கப்படுகிறது. அவையே மிகப்பெரும் வெற்றியடைகின்றன. இன்றைக்கு கதாநாயகன் குடிக்காதவனாக காட்டும் படம் என்பது மிக அரிது. படத்தின் trailer கூட குடிப்பதை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.  படத்தில் இப்போது புகை பிடிக்கும்போது அல்லது மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுகின்றன. சில படங்கள் முழுக்க இந்த வாசகங்கள் காட்டப்படுகின்றன. மதுவை சினிமாவும் காசாக்குகிறது.    

பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட இன்றைக்கு குடித்துவிட்டு வீடியோ/போட்டோ க்களை youtube/facebook ல் போட்டு பெருமை பட்டுக்கொள்கின்றனர். அரசும் குடிப்பதை ஊக்குவித்து வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. நேற்றைக்கு சாதாரண கடைகள் பிறகு பார் உள்ள கடைகள் என்றும் பின்பு elite பார் கடைகள் என்றும், இன்றைக்கு IMFL (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது) கடைகள் என்று பெருகிக்கொண்டே செல்கின்றது. அரசுக்கு வருமானம் இரண்டு வழிகளில் வருகின்றது. ஒன்று டாஸ்மாக் மது விற்பனை மற்றொன்று கடைக்கு வெளியில் போலீசை நிறுத்தி பண வசூல். இது உலகத்தில் எங்கேயும் நடக்காது. 

கடந்த ஐந்து வருட மது விற்பனை தமிழகத்தில் மட்டும் ரூ  77,820 கோடி, வெறும் 6800 விற்பனை மையங்களை கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மலைக்க வைக்கும் தொகை. வேறு எந்த தொழிலிலும் ஈட்ட முடியாதது. மற்ற எல்லாவற்றையும் விட தமிழகம் மதுவால் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் கர்நாடகா 13,842 கோடிக்கும், ஆந்திரா 14,846 கோடிக்கும், வெறும் 400 கடைகளை கொண்டுள்ள கேரளா கூட 7,860 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் தமிழகம் இக்காலத்தில் 22,000 கோடிக்கு விற்று முன்னிலை வகிக்கிறது. டாஸ்மாக் கொள்முதல் செய்வது வெறும் 10 நிறுவனங்களிடம் இருந்துதான். சராசரியாக 2,000 கோடியை இவை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலும் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வியாதிகளால் அல்லது அவர்களின் பினாமிகளால் நடத்தப்படுபவை. 

சென்ற வருடத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் என்று போலீசில் பிடிபட்டவர்கள் சுமார் 15,000 பேர். இவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது ரூ 1,000 என வைத்துக்கொண்டாலும் அரசுக்கு வருமானம் ஒரு கோடி ஐந்து இலட்சம். சென்ற வருடம் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 63,909. இதில் இறந்தவர்கள் மட்டும் 15,080. காயம் அடைந்தவர்கள் சுமார் 78,000ம் பேர். இவர்கள் 50 சதவிகிதம் பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்கள் என கொண்டால், அதாவது 39,000 பேர் (ஆனால் அரசின் இணைய தளம் வெறும் 15,000 பேர் மட்டுமே குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக கணக்கு காட்டுகிறது) மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று குறைந்த அளவாக/சராசரியாக ரூ. 3,000 செலவு செய்திருந்தால் அதன் மொத்த தொகை ரூ. 11.70 கோடிகள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் குடித்து விட்டு காரை ஓட்டி வந்து என் மேல் மோதியதில் எனக்கு கால் உடைந்ததுடன் செலவு நான்கு லட்சம். எனவே 3,000 என்பது மிக குறைந்த தொகை. இப்படி எல்லா இடங்களிலும் பணப்புழக்கத்திற்கு காரணாமாக இருப்பது  டாஸ்மாக தான்.

இன்னும் பத்து வருடங்களில் அரசின் வருமானம் பெருகி விடும் கூடவே குற்றங்களும் பெருகும் ஆனால் அவற்றை தடுக்க காவலர்கள் இருக்கமாட்டார்கள்.

Oct 8, 2013

அரசு அலுவலக அனுபவங்கள்


வாழ்கையில் எல்லோருக்கும் ஏதோவொரு நாளின் நல்ல/கெட்ட நேரத்தில் ஏதேனும் அரசு அலுவலகத்தின் வாசலை மிதித்திருக்க வேண்டும். அது பதிவு அலுவலகம், போலீஸ், கோர்ட் அல்லது கோட்டை என வித விதமான அனுபங்கள் கிடைத்த இடமாக இருக்கலாம். சிலருக்கு அவற்றை நினைத்து சிரிக்க தோன்றும் சிலருக்கு எரிச்சல் மிஞ்சும். 

என்னை பொறுத்த வரை அரசு ஊழியர்களை பற்றி மிக மோசமான மன நிலையையே கொண்டுள்ளேன் (நல்லவர்கள் மன்னித்துக்கொள்ளவும்). எல்லோரும் அவர்களின் வேலைகளுக்கு தகுதியானவர்களே ஆனால் அவர்களின் செயலால் கீழான நிலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்கும்வரை காட்டும் முனைப்பை, சேர்ந்த பின்பு காட்டுவதில்லை.  இங்கே என்னுடைய அனுபங்களை பகிர்கின்றேன்.

முதல் அனுபவம்: 

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றுக்கு செல்லும்போது  சாதி சான்றிதழ் தேவைப்பட்டது. அதனால் அது சம்பந்தமாக ஊரில் இருந்த நண்பரிடம் கேட்க, அவர் நீண்ட விளக்கம் கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார். முதலில் சந்தித்தது மணியக்காரர், நான் கண்ட முதல் அரசு அதிகாரி. அரசு அலுவலகம் பற்றிய எண்ணத்தை தவிடு பொடியாக்கியதும் இந்த இடம் தான். முன் புறம் தென்னை ஓலையில் வேய்ந்து மிக சாதரணமாக இருந்தது. என் இரண்டு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  எங்களை பார்த்ததும் காரணத்தை கேட்டவர் விண்ணப்பத்தை வைத்து விட்டு அவருக்கு கார்பன் மற்றும் A4 பேப்பரும் வாங்கி வரச்சொன்னார். என் நண்பர்கள் இருவரும் அதை செய்ய தயாராக இருக்க என்னால் தடுக்க முடியாமல் அன்று செய்தேன். பலனாக அவர் சான்றிதழில் கையெழுத்து இட்டார்.

அதற்கு அடுத்தபடியாக ரெவென்யு இன்ஸ்பெக்டர். இவர் எங்கள் ஊரிலிருந்து 15 கிமீ தள்ளி இருந்தார். அதனால் அடுத்த நாள் அவரை சந்திக்க முடிவெடுத்து காலையிலேயே சென்றோம். காலை 10 மணிக்கு சென்றால் யாருமே இல்லை. 11 மணிக்கு அவரது உதவியாளர் மட்டும் வந்தார். எங்களை காத்திருக்க சொல்லிவிட்டு அவர் வேலையை  தொடங்கினார். மதியம் வரை இன்ஸ்பெக்டரை ஆளையே காணவில்லை. பசி வேறு வயிரை குடைய, வேறு வழியில்லாமல் அதற்கு பிறகு தாசில்தாரை சந்திக்க என்று வீட்டில் வாங்கிய பணத்தில் மதியம் சாப்பிட்டோம்.  பின்னர் வந்து அலுவலகம் முன்பு இருந்த மரத்தடியில் ஒரு குட்டி தூக்கம் போட, ஆபிசர் 3 மணிக்கு வந்தார். உடனே சென்று பார்த்தால் வேறு சிலருடன் பேசிகொண்டிருக்க, ஒரு அரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. எங்களை அவரே அழைக்க கால்கள் தரையில் படாமல் சென்றோம். அவர் உடனே கையெழுத்து போட்டுவிட்டு காசை கேட்க, நான் ஒன்றுமே இல்லை என்றேன் முந்திக்கொண்டு. அவரின் உதவி மதியம் சாப்பிட மட்டும் காசிருக்கா என்றார். கோவத்தில் பதிலுக்கு பதில் பேச உதவி அடங்கினார். இறுதியில் வெற்றி எங்களுக்கே. காசில்லாமல் கையெழுத்து. 

அடுத்து தாசில்தார், அவரை சந்திக்க அடுத்த நாள் சென்றேன்.அந்த இடம் மட்டுமே நான் சினிமாவில் பார்த்தது போல் இருந்தது. முதலில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு பத்து நாள் கழித்து வரச்சொன்னார் ஒரு உதவி. பத்து நாளுக்கு பின்பு ஒரு வாரம் நடந்தும் சான்றிதழ் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பும் தெரிந்தது. ஆனால் அவருக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாரில்லை. எனவே எவ்வளவு நாட்கள் ஆனாலும் காத்திருப்பது என முடிவெடுத்தேன். ஒரு வாரம் இதே நிலை நீடிக்க தாசில்தாரை சந்திக்க முடிவெடுத்தேன். அவரை சந்திக்க உதவி தடுக்க மீறி சென்று சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டதாலோ என்னவோ உடனே சான்றிதழை கொடுக்க சொல்ல அங்கேயும் கையூட்டு கொடுக்காமல் வேலை நடந்தது.

நீங்கள் கையூட்டு கொடுத்த விவரத்தை அதாவது, எந்த அலுவலகத்தில் ,யாருக்கு, என்று, எவ்வளவு கொடுத்தீர்கள் போன்ற தகவல்களை WWW.IpaidBribe.COM ல் தெரிவிப்பதன் மூலம் ஊழலை வெளிக்கொணரலாம். (ஆனால் இப்படி பணத்தை வாங்கும் அசிங்கங்கள் இதெற்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்)


இப்படி தொடக்கமே அமைந்ததாலோ என்னவோ இன்று வரை எப்பொழுதும் எந்த இடத்திலும் கையூட்டு கொடுக்க மனம் வருவதில்லை. தொடரும்.....



image courtesy www.searchandhra.com

Oct 7, 2013

கனவுகளின் நாயகன்



இந்த நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப மேதை ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று (October 5) அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். தினமும் அவரை நினைவு கூற ஏராளமான விசயங்களை நம்மிடையே விட்டுச்சென்றுள்ளார். அவரை பற்றி சில தகவல்கள் இங்கே:

# இவர் தந்தை சிரியாவை சேர்ந்தவர் தாய் சுவிஸ். தத்து குழந்தையாக எடுத்து வளர்க்கப்பட்டவர்.

# கல்லூரி படிப்பு பிடிக்காமல் வெளியேறி, தன் நண்பர் ஸ்டீவ் வோஜ்னியாக்குடன் சேர்ந்து வீட்டு கார் கேரேஜில் ஆப்பிளை ஆரம்பித்தார். இவர் salesman நண்பர் வோஜ்னியாக் engineer. 

# தனக்கு மிகப்பிடித்த Beatles Apple ஆல்பமில் இருந்து தன்னுடைய கம்பெனி பெயரை தேர்வு செய்தார்.

#  அவருடைய முதல் வெற்றிகரமான Apple II மற்றும் அடுத்து வெற்றி பெற்ற Mac இருபத்தைந்து வயதில் அவரை மில்லியனர் ஆக்கியது. இவை Microsoft என்ற நிறுவனத்திற்கு தூண்டுகோலாக இருந்தது.

# 1985ம் வருடம் இவரால் பெப்ஸி கம்பெனியில் இருந்து வேலைக்கு சேர்க்கப்பட்ட Sculley என்பவருடன் ஏற்பட்ட பிரச்னையில் ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

# முப்பது வயதில் ஆப்பிளுக்கு போட்டியாக Next என்ற நிறுவனத்தை தொடங்கி Microsoft கணிப்பொறிகளை விற்க ஆரம்பித்தார். இதை உபயோகித்து Tim Berners Lee இண்டர்நெட்டை கண்டுபிடித்தார். 

# 1986ம் ஆண்டு அனிமேஷன் துறையின் முதல் நிறுவனமான Graphics Group என்ற நிறுவனத்தை ஜார்ஜ் லுகாசிடம் இருந்து $5 மில்லியனுக்கு வாங்கினார். அதனை Pixar என்று பெயர் மாற்றினார்.

# 1993 ம் ஆண்டு Toy Story உலகின் முதல் அனிமேஷன் திரைப்படமாக வந்தது. பின்னர் 2006ம் ஆண்டு டிஸ்னிக்கு Pixarஐ $8 பில்லியனுக்கு விற்றார்.

# 1995ல் ஆப்பிள் நிறுவனம் மிக மோசமான நிலைக்கு சென்றது. Next நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியதன் மூலம் 1996ல் மறுபடியும் ஸ்டீவ் "அட்வைசராக வந்தார்.

# iMac வெளியிட்டு ஆப்பிளை உயர்த்த, பின்பு அவர் தொட்டதெல்லாம் பொன் (iPod, iPhone, iPad)   

# மொத்தம் முன்னூறு காப்புரிமைகளை வைத்திருந்தார்.


Oct 3, 2013

அரசியல் அசிங்கங்கள்


நேற்றைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பொய் வழக்கு போட்டு சிறுபான்மையினர் அதிக அளவில் சிறையில் அடைக்கப்படுவதாகவும். அவ்வாறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அந்த  நபரை விடுதலை செய்வதுடன் அவர்களது மறு வாழ்வுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். 

என்றைக்கும் காங்கிரஸ் மத சார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு சிறுபான்மையினருக்கு கங்கணம் கட்டிக்கொண்டு அவர்களின் காலை கழுவி விடும் வேலையை செய்கின்றனர்.  அது தவறில்லை ஆனால் சிறுபான்மையினர் என்பது முஸ்லீம்கள் மட்டும் அல்ல என்பது யார் புரிய வைப்பது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிகள் / அரசு உதவிகள் முஸ்லிம் மக்களை சென்று அடைவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. இது முக்கியமாக இம்மக்களுக்கென அதிக திட்டங்களை / நிதிகளை ஒதுக்கும் பீகார் மற்றும் உத்தர் பிரதேஷ மாநிலங்களில் நடைபெறுகிறது. இதை பற்றி எந்த அரசியல் வியாதியும் கவலை படுவதில்லை. ஏனெனில் அதை சுரண்டுவதே அவர்கள்தான். ஆனால் தீவிரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தவிர என்று கூட அறிக்கையில் தெரிவிக்காமல் பொதுவாக என்று கூறியுள்ள இவர் எதிர் வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டே. எப்படியோ இதனால் நான்கு ஓட்டு கிடைத்தால் சரி!.

-----------------  

முன்னால் பீகார் முதல்வர் லாலு பிரசாத், அவரது பதவிக்காலத்தில் செய்த  37.70 கோடி ரூபாய் ஊழலுக்காக 17 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னொரு முதல்வர் மிஸ்ரா, இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு IAS அதிகாரிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஐந்து வருட தண்டனை விதித்து உள்ளது. இதன் மூலம் அவர் தனது MP பதவியை இழந்துள்ளார்.      பத்திரிக்கைகள் நீதி நிலை நாட்டப்படதாக எழுதுகின்றன. அது எவ்வளவு நாட்களுக்கு நிலையானது என வரும் காலம் தெரியப்படுத்தும்.

இதே போல ஒரு வாரம் முன்பு ரஷீத் மசூல் என்ற காங்கிரஸ் MP தொண்ணூறுகளில் வி பி சிங் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தகுதி இல்லாத மாணவர்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு தண்டனை பெற்றுள்ளார். இவர் தான் இரு மாதங்களுக்கு முன்பு ஐந்தே ரூபாயில் தன்னால் டெல்லியில் உணவு சாப்பிட முடியும் என்று கூறியவர்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு படி வழக்குகளில் தண்டனை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி  பறிக்கப்படும். அதன் படி தண்டிக்கப்படும் முதல் நபராக ரஷீதும் இரண்டாவதாக லாலுவும் உள்ளனர். அப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நம் மாநிலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கில் உள்ளனர். பார்ப்போம் இன்னும் யாரெல்லாம் இதில் சிக்குவார்கள் என.

-----------------

வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் சேவகர்களின் பதவி பறிக்கப்படும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய அரசு அவசரமாக இந்த தீர்ப்பை எதிர்த்து அவசர சட்டம் இயற்றி அதனை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு பின்னர் பிரதமர் வெளிநாடு சென்றுவிட அது வரை தனக்கு எதுவுமே தெரியாது போலவும்,கண் விழித்து பார்க்கும்போது இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற பார்ப்பதை உணர்ந்த சூப்பர் பிரதமரின் மகன் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமரை அவர் வீட்டு வேலைக்காரன் போல திட்டினார். அது எதிர் கட்சிகளுக்கும் மீடியாவுக்கும் அவல் கிடைத்தது போல் வறுத்து எடுத்து விட்டனர். இறுதியில் மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இறுதியில் நடந்த கூட்டணி கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி கடைசி வரை போராடி பார்த்துள்ளது இந்த சட்டத்தை நிறைவேற்ற. இவர்களுக்கு ஓட்டு போடுவதை மறு பரிசீலனை செய்யுங்கள். 

Sep 19, 2013

ஒலிம்பிக்


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக விளையாட்டு திருவிழா. இதில் பதக்கம் பெறுவதை காட்டிலும் கலந்து கொள்வதே பெருமை என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம். திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களை அடையாளம் காணவே முடியாத அளவுக்கு திறமையான அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ள நாடு இது. அப்படியே சுய விருப்பத்தில் முன்னேறும் வீரர்களுக்கும் எந்த விதமான ஊக்கமோ, வசதியையோ ஏற்படுத்தி தராத/தர முடியாத நாடு. வென்ற பின்பு அவருக்கு பணத்தை கொடுத்து பாராட்டும் மக்கள் நிறைந்த நாடு இது.

ஒலிம்பிக் போட்டியை நடத்த உலக நாடுகள் போட்டியிடுகின்றன. அதை திறம் பட நடத்துவது என்பது பெருமையான விஷயம் என்றாலும் நடத்தும் நாட்டின் மற்றும் நகரத்தின் பொருளாதார, உள் கட்டுமான வளர்ச்சிக்கும் உதவும். அதிக பணம் செலவழித்து நடத்தவேண்டுமா என கூவும் மணி சங்கர் போன்ற ஆட்கள் ஏன் எதுவும் தெரியாதது போல பேசுகிறார்கள் என்பது முழு அரசியல்.

நாம் காமன்வெல்த் போட்டிகளை நடத்தவே திணறினோம்.  அதற்கு காரணம் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் மற்றும் திறமையற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்.  இதையே சிறந்த திட்டமிடல் மூலம் மிகவும் வெற்றிகரமானதாக மாற்றி இருக்க முடிந்திருக்கும். பழைய நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்காமல் புதிய ஒன்றை கட்டியிருக்கலாம் அல்லது வேறு நகரத்தில் நடத்துவதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு உதவி இருக்கலாம்.  கட்டிய பாலமே பத்து நாளில் இடிந்து விழுந்தது நம் சாதனை.

1964 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஜப்பானுக்கு கிடைத்தது. அதனை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இரண்டாம் உலக யுத்தத்தில் அழிந்து போயிருந்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு மாற்ற உதவியது. மற்றும் உலகிற்கு தன்னுடைய புதிய முகத்தினை காட்ட உதவியது.

1976 போட்டியை கனடா பெற்று மிக மோசமான திட்டமிடல் காரணாமாக $2 பில்லியன் நட்டம் அடைந்தது.

1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியானது பொது மற்றும் தனியார் பங்களிப்பில் மிகப்பெரிய இலாபம் ஈட்டியது.

1988 சியோல் போட்டியை அரசே நடத்தியதில் $300 மில்லியன் லாபம் அடைந்தது.

1992 பார்சிலோனா போட்டியானது மிக குறைந்த லாபமே அடைந்தாலும் அந்நகரத்தின் உள்  கட்டுமான வளர்ச்சிக்கு உதவியது.

2004 ஏதென்ஸ் போட்டியானது அந்நாட்டை கடன் நெருக்கடியில் தள்ளி மொத்த ஐரோப்பாவையும் பாதித்தது.

2008 பெய்ஜிங் போட்டியின் லாபம் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அந்நகர கட்டமைப்பு வளர்ச்சி பெற்றது. 

2012 இலண்டன் போட்டிகளோ கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு உதவியது. அவர்கள் லண்டன் லெகசி  2020 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தி உள்ளனர்.

2016 போட்டியினை நடத்த ரியோ டி ஜெனிரோ நகரம் தயாராகிக்கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் முதல் முறையாக போட்டி நடை பெற உள்ளது.

மேல் உள்ள தகவல் படி சரியான திட்டமிடல் மூலம் வளர்ச்சிக்கு உதவலாம். உடன் வீரர்களுக்கும் உலகத்தரத்திலான விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற உதவும். இதை வெறும் பெருமைக்கு நடத்துவதை விட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டாவது நம் நாடு நடத்த முன் வரலாம். ஒரு வாரம் முன்பு 2020 போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  நாம் 2024 போட்டிகளுக்காவது தயாராகலாம். யார் இதை பற்றி யோசிப்பது.

எல்லா விளையாட்டு அமைப்புகளிலும் அரசியல்வாதிகளே 20-30 வருடங்களுக்கு மேலாக தலைவராக உள்ளனர். பாட்டியாலா ராஜ குடும்பத்தினர் அரை நூற்றாண்டுக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளனர். ஒலிம்பிக் கவுன்சில் சட்டங்களின் படி நாட்டின் ஒலிம்பிக் கவுன்சில் அரசியல் தலையீடில்லாத சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்.

தற்போது இந்தியா ஒலிம்பிக் கமிட்டி ஊழல், அரசியல் தலையீடு மற்றும் IOC ன் சட்டங்களின் படி நடக்காதது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நம் தேசியக்கொடி பிடித்து செல்ல முடியாது.  ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி உள்ள மிகப்பெரிய இழுக்கு.
ஜெய் ஹிந்த்!