Feb 22, 2014

கோர்ட்டில் ஒரு நாள்

.

இதுவரை கோர்ட் நடவடிக்கைகளை திரையில் மட்டுமே கண்ட எனக்கு முதல் முறையாக அவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் கோர்ட், கல்லூரிக்கு அருகாமையில் அமைந்தும் அதன் நடவடிக்கைகளை பார்க்கும் ஆர்வம் இல்லாததால் உள்ளே சென்றதில்லை. அதிகபட்சமாக குறைந்த விலையில் கிடைத்த மதிய உணவிற்காக மட்டுமே சென்றுள்ளேன். இப்பொழுதுதான் அதுவும் அலுவகல பணியின் காரணமாக செல்ல வேண்டி இருந்தது. 

எங்கள் நிறுவனத்தில் Cheque மோசடி வழக்கு காரணமாக சென்றேன். உள்ளூரில் வசிப்பவர் பேரில்தான் கேஸ் போட முடியும் என்பதால் என் பெயர் முன்மொழியப்பட்டது.  கம்பெனி வக்கீலை சென்று சந்தித்து அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்தேன், அங்கேயே ஏழரை ஆரம்பித்தது. சில வங்கி நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் இல்லாததால் மனிதர் டென்ஷன் அடைந்து விட்டார். எப்படியோ சமாளித்து தகவல்களை கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து கேஸ் file செய்ய கோர்ட்க்கு வரச்சொன்னார். நானும் நம்மை இன்றே ஜட்ஜ் கேள்வி கேட்க ஆரம்பிப்பார் என்ற ஆர்வத்தில் நேரத்திலேயே சென்றேன். வக்கீலின் ஜூனியர் மட்டும் போன் செய்து இன்னும் சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வந்து ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அடுத்த வாரம் வரச்சொல்ல என் சுருதி சட்டென இறங்கியது.

அடுத்த வாரம் கூப்பிட்டு சரியாக நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார். இந்த முறை கோர்ட் ரூமுக்கே வரச்சொல்ல ஆர்வம் அதிகரித்தது. அங்கே சென்று அவமானப்பட போவது தெரியாமல் நேரத்திலேயே சென்றேன். பிறகு தான் வக்கீல் வரமாட்டார் என்று தெரிந்தது சரி ஜூனியர் வருவார் என பார்த்தால் அவரும் கழண்டு கொள்ள, ஜூனியரின் ஜூனியர் ஒருவர் சரியாக கோர்ட் ஆரம்பிக்கும் முன்னர் வந்தார். வந்தவர் என்னிடம் கோர்ட் அறை வாசலில் எல்லோர்க்கும் முன்பாக சென்று நிற்குமாறு கூறிவிட்டு அறையின் உள்ளே சென்றார். கோர்ட் அறையின் முன்புறம் என்றதும் ஏதோ யாரும் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு இதை சொல்கிறார் என நினைத்துக்கொள்ள வேண்டாம். அது ஒரு சிறிய அறை ஆனால் முன்புறம் மட்டும் ஒரு நூறு பேருக்கும் மேல் வாசலை அடைத்துக்கொண்டு நின்று இருந்தனர். இதில் எப்படி எல்லோருக்கும் முன்பு போய் நிற்பது என்று நினைத்தேன். சரி நிற்கவில்லை என்று திட்டி விட்டால் என்ன செய்வது என்று முண்டியடித்து முன்னேறினேன். முதலில் பின் வாசலில் நின்று இருந்தவர்களை அழைத்தனர். அவர்கள் ஜட்ஜ்க்கு எதிர்புறம் இருந்த கூண்டில் நின்று கையெழுத்து போட்டனர். சரி இங்கு இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் போல, நாம் அங்கே நிற்போம் என நகர்ந்தேன்.  அங்கே சென்ற பதினைந்து நிமிடத்தில் மொத்த கூட்டமும் களைய நான் மட்டும் நின்றிருந்தேன். பிறகு தான் சோதனையே, இப்பொழுது முன் வாசல் முறை போல. அங்கிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். இது என்னடா கொடுமை என்று அங்கே ஓடினேன். இம்முறை கூட்டம் உஷாராகி வழி விட மறுக்க கடைசி இடமே கிடைத்தது. கூட நின்றவரிடம் இரண்டு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அவர் பின் வாசல் கொலை மற்றும் பிற வழக்குகளில் இருப்பவர்கள் தினமும் கோர்ட்டில் கையெழுத்திட வருபவர்கள் , இந்த கூட்டம் மற்ற பொது வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் என்றார்.

நேரம் அதிகரிக்க கூட்டம் குறைய தொடங்கியது. என் முறை வந்த போது கம்பெனி பெயருடன் என் பெயரை சேர்த்து சொன்னார்கள், கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள் நுழைந்தேன். முதலில் ஒரு முறை அறையை நோட்டமிடலாம் என்று ஜட்ஜ், டைப் அடிக்கும் பெண்மணி, அவருக்கு கீழ் இருந்த பெண்மணி, தவாளி, உட்கார்ந்திருந்த வக்கீல்கள் என்று சுற்றி பார்த்து திரும்பவும், ஜட்ஜ்க்கு கீழே இருந்த பெண்மணி 8-1 வாய்தா என சொல்ல ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க, மறுபடியும் சொன்னார். நான் எதும் சொல்லாமல் அவரையே பார்க்க, அவர் மறுபடியும் வாய்தாங்க  என்றார். என் பின்னாடி இருந்தவர் என்னை சரி என்று சொல்லிவிட்டு பின்னாடி வாப்பா என்று காதில் கிசு கிசுக்க, நான் அந்த பெண்மணியிடம் ஓகே என்று விட்டு பின்னால் நகர கோர்ட் மொத்தமும் சிரித்தது. ஒன்றும் புரியாமல் முழிக்க ஒருவர் தலையிலடித்துக்கொண்டு வாய்தா ன்னு சொன்னா வந்துரனும் என்றார். போயிட்டு அந்த தேதியில வாங்க என்றார். என்னடா இது நம் நினைப்பிற்கு மாறாக நடக்கிறதே என்று வெளியில் வந்து விட்டேன்.

இப்படியாக ஆறு முறை வாய்தாவிலேயே முடிந்து போனது. இறுதியாக கடந்த திங்கட்கிழமை வரச்சொன்னார்கள். எப்படியும் வாய்தா என்ற முடிவில் தான் சென்றேன். அன்றைக்கு வழக்கத்தை விட காத்திருந்தேன். உணவு இடைவேளை வந்த பிறகு தான் தெரிந்தது எங்களுடைய கேஸ் கட்டை கோர்ட்டில் தொலைத்து விட்டார்கள் என்று. இப்படியும் நடக்குமா (எனக்கு மட்டும் நடக்கும்) என நினைத்துகொண்டு இருக்க ஜூனியர் சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். சாப்பிட்டு விட்டு வர அவரோ நாளைக்கு வாங்க என வழி அனுப்பி வைத்தார்.  அடுத்த நாள் கடுப்பிலேயே போய் நின்றேன். ஜூனியர் என்னிடம் வந்து வழக்கம் போல அறையின் முன்புறமாக நிற்க சொல்ல கோபம் வந்ததும் "எப்படியும் வாய்தா தான் இதுல முன்னாடி நின்னா என்ன பின்னாடி நின்ன என்ன" என்று கேட்க தோன்றி நாகரிகம் கருதி அமைதியாக நின்றேன். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

மதியம் ஒரு மணி வரை அழைப்பு வராததால், சரி கேஸ் கட்டு இன்னும் கிடைக்க வில்லை போல என்று என்னும்போதே அழைப்பு வர எதுவுமே சொல்லாமல் ஜட்ஜ்க்கு கீழ் இருக்கும் பெண்மணி பார்த்துக்கொண்டிருக்க, என்னை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை அழைத்தார். சரி இதுவும் எதோ புது முறை போல என நினைத்துக்கொண்டு வெளியேறினேன். ஜூனியர் வந்து சாப்பிட போகாமல் ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார்.  வெறுப்பில் வேடிக்கை பார்க்கலாம் என நின்றால் கால் வலிக்க, வெளியில் இருந்த திண்ணையில் சென்று அமர. அங்கு ரிமாண்டுக்கு வந்த கைதிகள் வேறு பலத்த பாதுகாப்புடன் இருக்க, ஒரு ஓராமாக உட்காந்தேன். சரியாக இரண்டு மணிக்கு அழைக்க நானும் வாய்தா என்ற முடிவிலேயே சென்றேன். ஆனால் கோர்ட் பெண்மணி என்னை கூண்டில் ஏறி நிற்க சொன்னார். பதட்டத்தில் ஏறி நின்றேன்.

"சத்தியமாக" என்று சொல்லுமாறு என்னிடம் சொல்லப்பட, எங்கே பகவத் கீதையை காணோம் என்ற ஏமாற்றத்தில் அப்படியே பிழையில்லாமல் சொல்லிவிட்டு நின்றேன். பிறகு ஜட்ஜ் ஒவ்வொரு கேள்வியாக பொறுமையாக கேட்க நானும் பதில் சொல்ல அவருக்கு அருகில் இருந்த டைப் ரைட்டர் ஒரு பேப்பரில் நான் சொன்னதை அப்படியே அடித்து அதில் கையெழுத்து போட்டுவிட்டு போக சொன்னார்கள். நானும் கூண்டை விட்டு இறங்கி கையெழுத்து போட செல்ல, ஜூனியர் தடுத்தார். மறுபடியும் கையெழுத்து போட சொல்லி அழைப்பு வர, நான் செல்ல ஜூனியர் தடுக்க, கடுப்பாகி அவரிடம் போகவாங்க என்று  கேட்டேன். அவரோ வெளியில் நில்லுங்க என்றார். வெளியில் நிற்கும்போது ஜூனியர் வந்து பாராட்டினார். நன்றாக தடுமாறாமல் பதில் சொன்னதாக. சரி கையெழுத்து எப்ப போட பசிக்குதுங்க எனும்போதே தவாளி வந்து நின்றார். அவரிடம் ஜூனியர் இருபது கொடுக்கச்சொல்ல, இதற்கு தானாடா இவ்வளவு என்று அலுத்துக்கொண்டே பர்சில் கைவிட ஒரே ஒரு ஐம்பது மட்டும் பல்லிலத்தது, அவரும் பல்லை இளித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். இவ்வாறாக என் முதல் அனுபவம் முற்றுப்பெற்றது. இதில் நடந்த சில சுவராஸ்ய தகவல்களை அடுத்து பகிர்கின்றேன்.

Feb 3, 2014

RBI - 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன.


நமது மத்திய வங்கி கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணம் 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட தாள்களில் அச்சிட்ட ஆண்டு கிடையாது. அதற்கு பின்பே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. 

வரும் மார்ச் 31, 2014 க்கு பின்பு இந்த தாள்கள் முழுமையாக புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுகின்றன. ஏப்ரல் 1, 2014 முதல் இந்த தாள்களை எந்த வங்கிகளும் கொடுத்து புதிய தாள்களாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜூலை 1, 2014க்கு பிறகு வாடிக்கையாளராக இல்லாத வங்கிகளில் பத்து தாள்களுக்கு அதிகமாக மாற்ற விரும்புபவர்கள் தங்களின் சுய அடையாளம் மற்றும் குடியிருப்பு முகவரிக்கான சான்றுகளுடன் மாற்றிக்கொள்ளலாம்.

ரூ.50,000/- மேல் பணப்பரிமாற்றம் செய்பர்வகள் தங்களுடைய PAN கார்ட் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பத்து லட்சத்திற்கு அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் பற்றிய விபரம் நிதி புலனாய்வு பிரிவிற்கு தெரிவிக்கப்படும்.  பண மாற்று பரிவர்த்தனையின் போது ஐந்துக்கும் அதிகமான கள்ள நோட்டுக்கள் இருந்தால் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட வேண்டும்.

மார்ச் 31 க்கு பிறகும் இவற்றை மாற்றிக்கொள்ள வங்கிகள் அனுமதிக்கும் எனவே பயப்பட தேவையில்லை. ஆனாலும் அதற்கு முன்பாகவே மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரும்ப பெறுவதற்கான காரணங்கள்:

1. பாதுகாப்பு:
    2005க்கு முந்தைய தாள்கள் அதற்கு பிறகு அச்சிடப்பட்ட தாள்களை விட பாதுகாப்பு அம்சங்கள் குறைவானவை. மிக அதிகமான போலித்தாள்கள் 2005க்கு முந்தையதன் நகல்களே.

2. கருப்பு பணத்தை ஒழிப்பது:
       பணத்தின் மதிப்பு என்பது பரிமாற்றத்தில் இருக்கும் வரை மட்டுமே. எனவே புழக்கத்தில் இருந்து அவை அகற்றப்படும்போது அவற்றின் மதிப்பு பூஜ்யம்தான். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் கண்டிப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

3. பணப்பதுக்கத்தை ஒழிப்பது:
     இந்த திட்டத்தின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் தானாக சந்தைக்கு கொண்டு வரப்படும். ஆனால் அதை கண்டிப்பாக நடைமுறை படுத்துவதன் மூலமே சாத்தியம்.


Jan 24, 2014

யானைக்கு ஒரு காலம்?


யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. நாளைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் யானை இருக்காது இது புது மொழி. ஒரு காலத்தில் மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளையும், கொடுங்கோலன் தைமூரின் படைகளையும் பயமுறுத்திய இந்திய யானைகள் இன்று ரேசன் அரிசிக்காக ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன. மனிதனின் பணத்தாசைக்கும் இடத்தாசைக்கும் இரையாவதில் யானைகளும் ஒன்று.

என்னுடைய கிராமம் கோவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. நினைவு தெரிந்த வரையில் நான் எங்கள் ஊரில் யானைகளை பார்த்ததும் இல்லை அவற்றை யாரும் பார்த்ததாக சொல்லி கேட்டதும் இல்லை. அதிக பட்சம் கேள்விப்பட்ட/பார்த்தவர்களால் சொல்லப்பட்ட மிருகங்கள் என்றால் காட்டு நாய், காட்டு பன்றி மற்றும் அரிதாக தென்பட்டதாக சொல்லப்பட்ட மான்கள். இவையெல்லாம் கடந்த பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தையவை. அதற்கு பிறகு யானைகள் அதிகம் ஊருக்குள் தென்பட ஆரம்பித்தன. அதிகம் ரயில்களில் அடிபட்டும் இறக்க ஆரம்பித்தன. இவற்றின் பின்னணி அன்றைக்கு தெரியவில்லை. ஏதோ கேரளாவில் உணவில்லை என்பதால் இங்கு வருவதாகவும், இவை காட்டு யானைகளே அல்ல சர்க்கஸ் யானைகள் அதனால் தான் மனிதர்களை துன்புறுத்துவதில்லை என கதைகள் யானைகள் கூடவே கிளம்பின.

முதன் முதலில் ரியல் எஸ்டேட்காரர்கள் வந்தனர். அவர்களின் ஆசை வார்த்தைக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்றனர். இதில் பாதிக்கப்பட்டவை முயல்களும் காட்டுப்பன்றிகளும் தான். இன்றைக்கு இந்த மிருகங்கள் இருந்த அடையாளம் துளி கூட கிடையாது.  விளை நிலங்கள் வீடுகளாக மாறிய போதுதான் யானைகள் ஊருக்குள் வந்தன. முதலில் ஒன்று இரண்டாக வந்தவை அதிகபட்சம் 20 யானைகள் வரை உணவுக்காக ஊருக்குள் வந்தன. அப்போது வரை எந்த தோட்டங்களுக்கும் மின்சார வேலிகள் கிடையாது. முதன் முறையாக ஒரு தனியார் கல்லூரி ஒன்று 500 ஏக்கருக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட எல்லைக்குள். இந்த இடத்தை முழுக்க சுற்றி முள் வேலி கட்டப்பட்டது.  யானைகள் மொத்தமாக கல்லூரிக்குள் இடம் பெயர்ந்தன. இது தொலைக்காட்சி செய்திகளில்  கூட இடம் பெற்றது.    

பின்னர் கல்லூரியின் முள் வேலி மின்சார மயம் ஆனது கூடவே அகளிகளுடன்.  இதனால் அந்த யானைகள் கிழக்கே நகர ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி கடந்தன. அங்கிருந்தும் கிழக்கில் துரத்தப்பட்டு ரயில் தண்டவாளங்களை கடக்க முற்பட்டு உயிரை துறந்தன. இப்படி அதனுடைய இடத்தை பறித்துக்கொண்டு அவை துரத்தி அடிக்கப்பட்டன. பின்னர் கல்லூரிக்கு அருகில் சுமார் 1000 ஏக்கர் ரியல் எஸ்டேட்காரர்களால் வளைக்கப்பட்டு  golf கோர்ட்களும் வீடுகளும் வந்து ஒரு மலையே மறைக்கப்பட்டது. இதே போல மேற்கு தொடர்ச்சி மலையின் ஓரங்கள் முழுவதும் கல்லூரிகளாகவும், சாமியார் மடங்களாகவும் ஆனது. இன்றும் இந்த இடங்கள் தமிழ்நாடு வன துறையின் வலைத்தளத்தில் வனப்பகுதிகளாக காட்டப்படுகின்றன. இப்படி யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழிகளை தடுக்கவும் அவை ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன.

மொத்தம்  3800 முதல் 4800 யானைகள் நீலகிரி வனச்சரகத்தில் வாழ்கின்றன. கடந்த பத்து வருடங்களில் மட்டும் 298 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஒன்று மட்டுமே முதுமையின் காரணமாக உயிரை விட்டுள்ளது. மற்றவை பசி, வேட்டை, நோய், மின்சார வேலிகள் மற்றும் ரயிலில் அடிபட்டும் உயிரிழந்துள்ளன.  ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அவற்றில் ஒன்று கர்ப்பிணி, விபத்தில் குட்டியை ஈன்றது. அதுவும் இறந்தே பிறந்தது. இப்படி அவற்றின் வாழ்விடத்தை பறித்துக்கொண்டு அவற்றின் உயிர் இழப்பிற்கும் காரணமாக உள்ளோம் குற்ற உணர்வே இல்லாமல்.



வன இலாகா என்பது வன உயிரினங்களுக்கும் வன பகுதிகளின் பாதுகாப்பிற்கும் செயல்படும் அமைப்பு. இங்கள்ள மற்ற நாடுகளில். இங்கே வன பகுதிகளில் குடியிருப்புகளுக்கும் கேளிக்கைகளுக்கும் அனுமதி அளித்து விட்டு அங்கிருப்பவர்களின் பாதுகாப்பிற்காக வன விலங்குகளை துரத்திக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது. நிலத்தில் உள்ளதில் பெரிய மிருகம் யானை என்று படித்ததை இன்றைக்கு இப்படி மாற்றிக்கொள்ளலாம் நிலத்தில் உள்ள பெரிய மிருகம் யானையை அழித்த மனிதனே பெரிய மிருகம்.

Jan 1, 2014

தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the fittest)

இந்த தளத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. ஒரு வருடத்தில் நான் எழுதியது வெறும் 26 பதிவுகளே. கடந்த பல ஆண்டுகளாக வாசிப்பவனாக மட்டும் இருந்து வந்தேன், ஆனால் ஆறு மாதங்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் எழுதும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். சென்ற ஆண்டு அனுபவித்த வலி, பட்ட கஷ்டங்கள் மிக அதிகம். ஒரே சந்தோசம் என் மகள். Survival of the fittest என்ற பதத்தின் படி கடந்த ஆண்டு (பிழைத்து) கடந்து விட்டேன். இந்த ஆண்டை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள போகிறேன். வாழ்க்கையை புதியதாக ஆரம்பிக்கும் எண்ணங்களுடன் இன்றைய நாளை ஆரம்பிக்கின்றேன்.


Dec 25, 2013

எம் ஜி ஆர்


அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே மக்கள் திலகம் எம் ஜி ஆர்  என்ற மந்திரப்பெயருக்கு அடிமையாக இருந்தவர்களில் / இருப்பவர்களில் நானும் ஒருவன். அதை சொல்வதில் பெருமை கொள்கிறேன். இன்றைக்கு இருக்கும்  பல அரசியல்வாதிகளுக்கு வாழ்வளித்தவர். அவர் இறக்கும்போது என் வயது 6. அவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது என் தந்தையின் மூலம் தான். அவருடன் சென்று பார்த்த அடிமைப்பெண் படம் இன்றும் நினைவில் உள்ளது. நினைவு தெரிந்த நாளில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு அவரை பற்றிய ஆர்வம் அதிகரித்து தகவல்களை தேடி பிடித்து படிக்க படிக்க பிரம்மிக்க வைத்தது.

இன்று வரை தமிழக அரசியல் அவரின் பெயரை சொல்லியே நடக்கிறது.  ஏன் மலேசிய தேர்தலில் கூட அவர் பெயர் பயன்படுத்தப்படுகிறது.  இத்தனைக்கும் மேல் அவர் பற்றிய புத்தகங்களை பற்றி படிக்கும்போது அவர் மிகச்சிறந்த மனிதராக இருந்துள்ளார். அவரின் வள்ளல் குணத்திற்கு ஈடு இணை யாரும் இல்லை.  நேற்றைக்கு கூட அவரின் 96 வது பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த கூட்டம் உணர்த்தும் அவரின் பெருமையை.  நான் கருத்து கூறி அவரின் பெருமையை யாருக்கும் உணர்த்த வேண்டிய நிலை இல்லை. 

பிடித்த படம்: நாடோடி மன்னன்
வியந்த படம்: கலை அரசி 
பிடித்த பாடல்: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே (மலைக்கள்ளன்)



Nov 9, 2013

மழை!


மழையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக சந்தோசம் அடைந்திருந்தால் நீங்களும் என்னை போன்றவர் தான். உடனே நீங்கள் படத்தில் காட்டுவது போல நனைந்துகொண்டே பாடுவது, நடப்பது என்பதல்ல என் மகிழ்ச்சி. அது ஒரு தனி சுகம். சிறு வயதில் இருந்து மழையில் நனைவது என்பதை விட அதனால் நடக்கும் செயல்களால் சந்தோசம் அடைந்தவன்.

ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் தான் படித்தேன். ஆனாலும் வீட்டுக்கு வருவது என்பது மாலையில் மட்டுமே. பள்ளிக்கு வெளியே ஆளுக்கு ஒரு குட்டி முள் செடியை பங்கு பிரித்து வைத்திருப்போம். தினமும் அதற்கு பாத்தி கட்டி சிறுநீர் விட்டு அதை வளர்ப்பது தான் போட்டி. ஒரு நாளைக்கு முடிந்த வரை நீர் ஊற்றி வளர்ப்போம். செடியோ மிக கஷ்டப்பட்டு வளரும், காரணம் சொல்லவே வேண்டாம்.  மழைக்காலத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் நம் நீர் தேவைப்படாது. மேலும் அந்த காலத்தில் மட்டுமே பச்சை பசேலென வளரும்மற்ற நண்பர்களின் செடி கருக நம்முடைய செடி மட்டும் மழையால் வளர்வதில் ஒரு மகிழ்ச்சி. மேலும் ஊரின் தெற்குப்பக்கமாக இருக்கும் தோட்டத்தில் மாமரம் இருக்கும். மாங்காயை சாப்பிட வேண்டுமென்றால் கல்லால் அடிக்க வேண்டும், ஆனால் அது தோட்டாக்காரன் மருதனை எழுப்பி விடும். அவன் துரத்துவான் அல்லது திருப்பி கல்லால் அடிப்பான். சிறிது தைரியமானவர்கள் அல்லது ஓடததெரிரிந்தவர்கள்  மட்டுமே  செய்யும் காரியம் அது. மற்றொரு வகை மழையால் கீழே கிடக்கும் காய்களை பொறுக்குவது. நான் இரண்டாம் வகை. பள்ளி இடைவேளை நேரம் அல்லது மாலையில் வீட்டுக்கு வந்ததும் சட்டையை கழற்றி வைத்து விட்டு வெறும் பனியன் மற்றும் டவுசருடன் சென்று பொறுக்கும் வேலையை செய்ய வேண்டும். இது மழைகாலத்தின் முதல் மகிழ்ச்சி.

ஆறாம் வகுப்புக்கு எனது ஊரில் இருந்து பதினைந்து கீ.மீ தொலைவில் இருக்கும் ஆலாந்துறையில் சேர்ந்தேன். அந்த பகுதியிலேயே மிக பெரிய பள்ளி இது தான். இதை விட்டால் கோவை டவுன் பகுதியில் உள்ள பள்ளிகளில் தான் சேரவேண்டும். அதற்கு வீட்டில் தடா. ஆறாம் வகுப்பில் முதல் வாரத்திலேயே சந்தோஷம் மனதில் குடியேறி விட்டது. காரணம் பள்ளிக்கு அருகிலேயே ஆறு. உடன் தினமும் மதியம் சாப்பிடுவது என்பது அருகில் இருக்கும் கரும்பு / மஞ்சள் தோட்டங்களில் தான். வகுப்பறைகளும் மிக காற்றோட்டமாக இருக்கும். காற்றோட்டம் என்றால் ஜன்னல் கதவு என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு கதவில்லா வாசல் மட்டுமே, கூரைக்கும் சுற்று சுவருக்கும் மத்தியில் நான்கடிக்கு ஒன்றுமே இருக்காது. வெயில் காலத்தில் மட்டும் கொடுமையாக இருக்கும். மழைக்காலத்தில் எப்படி உட்காருவது என்று யோசிக்க வேண்டாம். பள்ளிக்கு விடுமுறை தான். அதுவும் சாதாரண மழைக்கே.  விடுமுறை விட்டால் நேராக ஆற்றுக்கு சென்று விளையாடுவது தான் முதல் வேலை. கன மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்ப்பதில் மற்றும் உடனே வீட்டுக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி

பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு நகரின் மையப்பகுதியில் இருந்த அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இருந்த நேரத்தை விட தியேட்டர்களில் இருந்த நேரம் தான் அதிகம். எனவே அங்கு அதிகம் மழையை அனுபவித்ததில்லை. ஆனால் அங்கு இருந்த விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தனியாக உட்கார்ந்திருப்பதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமே.  கல்லூரி காலத்தில் டைப்ரைட்டிங் படிக்க பக்கத்து ஊரில் உள்ள நிறுவனத்தில் நண்பர்களுடன் சேர்ந்தேன். அப்பொழுது மாலை நேர மழைக்காலத்தை அங்கிருந்த கல்லூரி பெண்களை பார்ப்பதில் கழித்து கூட ஒரு வித மகிழ்ச்சியே.

பின்பு முதல் வேலைக்கு சேர்ந்த பின்பு சில வருடங்களை தோழியுடன் மழை  நேரங்களில் ஊரை சுற்றிய நாட்கள் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள். இன்னமும் என்னுடைய பைக்கில் மழை நேரத்தில் செல்வதை ரசித்து செய்கின்றேன்.  I  am Happy....

Nov 8, 2013

தீபாவளி!


இருபது வருடங்களுக்கு முந்தைய தீபாவளியை இன்றைய நாளுடன் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யவே முடியாத அளவுக்கு மலையளவு வளர்ந்துள்ளது.  அன்றைக்கு வெறும் 500 ரூபாயில் முடிந்த நாள் இன்றைக்கு 10,000 க்கு குறைவில்லாமல் தேவைப்படுகிறது.  புது துணியை எதிர்பார்த்து காத்திருப்பது, பட்டாசு வாங்கும் நாளை எதிர்பார்ப்பது என எல்லாமே எதிர்பார்ப்பில் கழிந்த நாட்கள் அவை. இன்றைக்கு தேவையான பணம் இருந்த போதிலும் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.

முன்பு தீபாவளி என்பது பள்ளியின் விடுமுறை நாளை எதிர்பார்த்து ஆரம்பிக்கும். வீட்டில் புது துணி எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற ஏக்கம் தொடங்கும். தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் புது துணி கிடைக்கும்.  அதை டெய்லரிடம் கொண்டு சென்றால் தீபாவளி அன்றைக்குத்தான் கிடைக்கும் என்று இடியை இறக்குவார். அம்மாவிடம் சொன்னால் அவரின் திட்டலில்தான் கொஞ்சம் முன்பே தருகிறேன் என்பார். ஆனாலும் அதிக தீபாவளி புது துணிகள் முந்தைய நாள் இரவு வரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்க வைத்தே டெய்லர் தந்துள்ளார்.

அதேபோலத்தான் பட்டாசுகளும். பள்ளியின் அருகில் கிடைக்கும் விலை பட்டியல் மற்றும் ஊரில் கிடைக்கும் பட்டியல்களை கொண்டு பட்டாசுகளை முன்பே மலையளவு குறித்து வைத்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ கடுகளவு தான். அதுவும் அப்பா போனஸ் வந்தால்தான் பட்டாசு என்று சொல்லிவிடுவார். எனவே சில காலம் போனஸ் என்றால் என்னவென்றே தெரியாமலும், தெரிந்த பின்னர் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்தது. பட்டாசு வாங்க ஊருக்கு அருகிலிருக்கும் FCI கிடங்கிற்கு அப்பா கூடிச்செல்வார். அது அரசாங்க கடை என்பதாலும், அங்கு விற்பனையில் இருப்பவர் அப்பாவிற்கு தெரிந்தவர் என்பதாலும், நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கடையில் மட்டுமே பட்டாசு வாங்கியுள்ளேன், இன்று வரை.

தீபாவளியின் அதிகாலை என்பது எண்ணை குளியலுடன் ஆரம்பிக்கும், அம்மா தங்கைக்கும் எனக்கும் நல்லெண்ணெய் தேய்த்துவிட அப்பா வைத்த சுடு தண்ணீரில் குளித்து விட்டு புது துணி உடுத்திக்கொண்டு முதல் சரத்தை கொடுத்து வைக்க சொல்வார். அதன் பின்னர் அவரும் குளியலை முடித்துக்கொண்டு சைக்கிளில் குல தெய்வம் கோவில், மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் என சென்று அங்கும் ஒவ்வொரு சரத்தை காணிக்கை வைக்க வேண்டும்.  பிறகு தான் மிச்சம் இருக்கும் வெடிகளை தொட வேண்டும் அவற்றை நண்பன் மோகனுடன் போட்டி போட கொஞ்சம் வெடிகள், பாட்டி வீட்டில் கொஞ்சம் வெடிக்க வெடிகள் என கணக்கு நீண்டு கொண்டே போகும்.  அதிலும் இரவில் வெடிக்கும் வெடிகள் தங்கைக்கும் மிச்சம் மீதி கார்த்திகை தீபத்திற்கும் கொடுத்து விட வேண்டும். ஆனாலும் அந்த நாளின் நினைவுகள் இன்றும் நீங்காமல் உள்ளன. 

வளர்ந்த பின்பு நண்பர்குலடன் சேர்ந்து கொண்டு கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை.  ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில் ஒரு புறம் நாங்களும் மறு புறத்தில் மற்றொரு நண்பர்களும் நின்று கொண்டு பட்டாசுகளை மேலே வீசிக்கொண்டும் ராக்கெட்டுகளை நிலத்தில் படுக்க வைத்தும் விடுவோம். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஆனதில்லை, சில வாசல் கூரைகள் தீப்பிடித்ததை தவிர.

இவை மொத்தமும் அன்றைக்கு வெறும் 3000 ரூபாயில் முடிந்துள்ளன. இன்றைக்கு அது பல மடங்கு உயர்ந்திருந்தாலும் அந்த சந்தோசத்தை தருவதில்லை. எதிர்கலாத்தில் என் பெண்ணின் மூலம் அவை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்/நம்பிக்கையில் நாளைய தீபாவளியை எதிர்நோகியுள்ளேன்.